Monday, November 26, 2007

அடுக்குமாடி குடியிருப்பு

ஓடியாடும் ஆடு,
வாலாட்டும் நாய்,
சத்தமிடும் குருவி,
பூனை, கோழி
எதுவும் கூடாதாம்
'அடுக்குமாடி குடியிருப்பில்'.

எவரோடும் பழகாத,
எதன் பொருட்டும்
தன்னிருப்பை வெளிப்படுத்தாத
தொட்டிமீன்கள்தான் வேண்டுமாம்
நகரத்து வாழ்விற்கு.

Monday, November 12, 2007

பிரதிபலிப்பு

ஒவ்வொரு நாளும்
ஆசையாகத்தான் இருக்கிறது
ஏறியவுடன் இருக்கை
கிடைக்க..

ஜன்னலோரமாய் அமர்ந்து
சாலையோர கடைகளை
வேடிக்கை பார்த்து
பள்ளி சிறுமிக்கு கை காட்ட...

இருக்கை கிடைப்பதற்கு
முதலில் வந்தவர்,
நீண்ட நேரமாய் நிற்பவர்
என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது

எவர்க்கருகில் உள்ளவர்
வெளியேறுகிறாரோ
அந்த இடத்தில்
அவரைப் போலவே...

உடல் வியர்த்து,
ஆடை கசங்கி,
தலை கலைந்து
இருக்கை கிடைக்கும்
நேரத்தில்
வந்துவிடுகிறது -
இறங்க வேண்டிய இடம்.

பயமாகத்தானிருக்கிறது
பயணங்கள்
வாழ்க்கையை பிரதிபலிக்கின்றனவா
என்று...

Friday, August 10, 2007

எதற்காக இந்த இடுகை...

"உனக்கு இந்த ஆடம்பரம் தேவைதானா" அப்படின்னு நீங்க கேட்பது புரியாமலில்லை. கவிதை, கதை ஹைக்கூ எதுவுமே எழுதினதில்லை. இலக்கியறிவுன்னு பார்த்தா.. "மனப்பாடச் செய்யுளைத்" தாண்டி எதையும் ரெண்டாவது முறை படித்ததில்லை. கலை, ரசனை இப்படி சொல்லக் கூடிய அளவிற்கு ஒன்றுமே இல்லையென்றாலும், எதற்காக இந்த இடுகை என்றால் எப்போதும் என்னைச் சுற்றி ஒரு வெறுமை படர்ந்து இருப்பது போன்ற ஒரு உண்ர்வு. எதைக் கொண்டு நிரப்புவது என்று புரியாமல், சும்மா.... ஒரு blog ஐ தொடங்கலாம்ன்னு தோணிச்சு.... so ...